Time Using 4 ( நம்மை பராமரிக்கும் ஆண்டவர் )
நம்மை பராமரிக்கும் ஆண்டவர்
யோபு 10:12 எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
அமெரிக்க தேசத்திலே ஒரு பெரிய தொழிலதிபர் இருந்தார். நன்றாக நடந்து கொண்டிருந்த தொழிலில் திடீரென்று மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் அவர்.
மிகப்பெரிய பணநெருக்கடியில் அவர் இருந்ததால், அவரது நண்பர்கள் மட்டுமல்ல; அவரது மனைவியும்கூட அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள்.
அந்த கவலையின் நேரத்தில் அவரை ஆறுதல்படுத்த யாருமே இல்லை. எல்லோரும் அவரை தனியாக விட்டு சென்றுவிட்டனர்.
அந்தக் கஷ்டத்தின் மத்தியில் ஒரு கொடிய வியாதி அவரைத் தாக்கி பலவீனப்படுத்தியது. அவருடைய இரண்டு நுரையீரல்களும் பழுதடைந்துவிட்டன. அந்த வியாதியோடு அவர் போராடிக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில் அவருடைய பழைய நண்பர் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்துவிட்டு சென்று விட்டார். மருத்துவமனையில் அவரோடு இருந்து அவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. தனிமையில் வாடினார். அந்தச் சூழ்நிலையில் ஓர் இரவு நேரத்தில் அவருக்கு தாங்க இயலாத வலி ஏற்பட்டது. இரவு முழுவதும் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அந்த வேதனையான இரவு கழிந்து விடிய ஆரம்பித்தபோது, பக்கத்து அறையில் இருந்து மெல்லிய பாடல் சத்தம், அவருடைய காதுகளை எட்டியது. அந்தப் பாடலை நன்றாக கேட்க வேண்டும் என்ற ஆவல் மேலிட, அவர் எழுந்து மிகவும் கஷ்டப்பட்டு நடந்து அறையை விட்டு வெளியே வந்தார். அவர் அறையின் அருகில் ஜெப அறை ஒன்று இருந்தது. அதற்குள் அநேகர் பாடிக்கொண்டிருக்கும் காட்சியை அந்த தொழிலதிபர் பார்த்தார். அவர்கள் (ஆண்டவர் உன்னை பராமரிப்பார்) என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தனர். அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் அவர்கள் பாடும்போதே, தனக்குள் ஏதோ ஒரு வல்லமை இறங்கியதையும், சந்தோஷமான ஆவி தன்னுடைய மனதை நிரப்பினதையும் அவரால் உணர முடிந்தது. அந்த நேரத்தில், அவருடைய சரீரத்தில் இருந்த பெலவீனம் மறைந்தது; அவரை வாட்டிக் கொண்டிருந்த நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தார்.
அதன்பிறகு அவருடைய தொழிலிலும் கர்த்தர் ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டார். ஜே.சி. பென்னி (J C Penny) என்ற பெயரில் சிறு சிறு கடைகளை அவர் தொடங்கினார். அதன் பிறகு உலகம் முழுவதிலும் அவருடைய தொழில் பரவியது. ஒரு பெரிய தொழிலதிபராகவும், மிகப்பெரிய செல்வந்தராகவும் ஆண்டவர் அவரை உயர்த்திவிட்டார். உலகெமெங்கும் அவர்களுக்கு 846 கிளைகள் இப்போது உள்ளன. ஆண்டவரிடமிருந்து வந்த அந்த சிறிய வார்த்தை அவரை குணமாக்கினது. தொழிலிலும் செழிப்பைக் கொண்டு வந்தது.
ஆம் ஆண்டவர் நம்மை பராமரிப்பவராக இருக்கிறார். எல்லோரும் கைவிட்ட சூழ்நிலையிலும் ஆண்டவர் நம்மை கைவிடாமல் காத்து பராமரிப்பவராக இருக்கிறார். பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது I பேதுரு 5:7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று. நம்முடைய எல்லா கவலைகள், பாரங்களை ஆண்டவர் மீது வைத்துவிடும்போது அவர் நமக்கு விடுதலை தந்து அளவில்லாத சமாதானத்தால் நிரப்புவார். நொறுங்கிப்போன நிலையில் யாருமற்ற சூழ்நிலைகளில், நோயோடு போராடிக்கொண்டு, சாவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா?? நம்மை பராமரிக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவர் இருக்கிறார். அந்த இயேசு கிறிஸ்துவை நாம் நோக்கிப்பார்த்து அவரை நாம் விசுவாசிக்கும்போது அவர் நம்மை பராமரித்து உயர்த்துவார்.
Glory to Jesus Christ

கருத்துகள்
கருத்துரையிடுக