Time Using 02 ( விசுவாசமுள்ள ஜெபம் )
விசுவாசமுள்ள ஜெபம்
மாற்கு 11:24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
ஒரு சமயம் நாத்திகன் ஒருவன் மதுபானக் கடை ஒன்றை முதலாவதாக பட்டணத்தில் திறக்க அனுமதி பெற்றிருந்தான்.அந்தக்கடை அந்த பட்டணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் இருக்கபோகிறபடியால் அந்த ஆலய விசுவாசிகள் அதை விரும்பவில்லை. விசுவாசிகள் எல்லாரும் அந்த மதுக்கடை இல்லாமல் போகும்படி தேவனிடத்தில் ஜெபித்தார்கள். அந்தக்கடை திறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜெபித்தபடி மின்னல் தாக்கி அந்த கடை எரிந்து தரைமட்டமானது.
விசுவாசிகள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் அந்த மதுபானக்கடை உரிமையாளரோ இந்த விசுவாசிகள் ஜெபித்ததின் விளைவாகத்தான் அவருடைய கடைக்கு இவ்விதம் சம்பவித்தது என்று விசுவாசித்து ஜெபித்த கிறிஸ்தவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்தார். விசுவாசிகளோ, தங்களுக்கும் கடை எரிந்து சாம்பலானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்கள். முதல் வாய்தாவிலே நீதிபதி இரு பக்கத்தாரையும் விசாரித்துவிட்டு “இந்த நிலையில் என்னுடைய தீர்ப்பு எப்படி இருக்க போகிறது என்று எனக்கே தெரியாது. ஆனால் ஒரு உண்மை விளங்குகிறது. அந்த மதுக்கடை உரிமையாளனான நாத்திகன் விசுவாசிகள் ஜெபித்த ஜெபத்தை நம்புகிறான். ஆனால் இந்த கிறிஸ்தவர்களுக்கு ஜெபத்தின் வல்லமையில் நம்பிக்கையில்லை. அதனால் தான் தங்கள் ஜெபத்தால் கடை எரியவில்லை என்று வாதாடுகிறார்கள்” என்று கூறினார்.
அப்போஸ்தலனாகிய பேதுரு சிறையிலிருந்தபோது விசுவாசிகள் அவன் விடுதலைக்காக ஜெபித்தார்கள். ஆனால் அவன் விடுதலையாகி வந்து கதவை தட்டினபோது விசுவாசிகள் அவனைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். தேவன் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிறார் என்பதை அநேகர் நம்புவது இல்லை. ஜெபத்தினால் நோய்கள் சுகம் ஆகும், பிசாசுகள் நீங்கும், நடக்க முடியாது என்று நினைக்கிறவன் என்று நினைக்கிற அற்புதங்கள் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் ஜெபத்தில் வல்லமையை அனுபவித்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும்படி பெரிய காரியங்கள் நடக்கும்.
இன்று நம்முடைய விசுவாசம் எவ்வாறு இருக்கிறது. ஆண்டவரிடம் நாம் வேண்டிக்கொள்ளுவதற்கு முன்பே அவர் நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிறார். அவரிடம் நாம் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது உன்னத ஆசீர்வாதங்களை அவர் நமக்கு தந்தருளுவார்.
மத்தேயு 21:22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
Glory to Jesus Christ.

கருத்துகள்
கருத்துரையிடுக